மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிற்கூடங்களில் மோட்டார், பம்புசெட், வெட் கிரைண்டர், ஜவுளி உற்பத்திக்கான இயந்திரங்கள் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பவுண்டரி தொழிற்கூடங்களுக்கு தேவையான நிலக்கரி, வார்ப்பட இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றத்தின் காரணமாக பவுண்டரி தொழில் நலிந்து வருவதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, கோவை மாவட்டத்தில் உள்ள பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிற்கூடங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த போராட்டத்தின் போது, பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்தி வருவதால், பவுண்டரி தொழிலை நடத்த முடியாத நிலை இருப்பதாகவும், இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் பவுண்டரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், மூலப்பொருட்களின் சீரற்ற விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மூலப்பொருட்களை அரசே கொள்முதல் செய்து, நிலையான கட்டுபடியான விலையில் பவுண்டரிகளுக்கு விநியோகிக்க வேண்டுமெனவும் பவுண்டரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோவை மாவட்ட சிறுகுறு பவுண்டரி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் சங்கத்தின் தலைவர் சிவசண்முககுமார், செயலாளர் சி.தங்கராஜ், பொருளாளர் கே.ராமராஜ் ஆகியோர் கோவை மாவட்ட அட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் சுமார் 150 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் சீரற்ற விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசே கொள்முதல் செய்து சிட்கோ மூலம் விநியோகிக்க வேண்டும். மூலப்பொருட்கள் வங்கியை துவங்கி செயல்படுத்த வேண்டும்.
பவுண்டரி தொழிலின் லாபம் தற்போது ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளதால் வங்கிகளில் உள்ள எங்களது கடனை திருப்பி செலுத்தும் காலத்தினை 7 வருடத்தில் இருந்து 15 வருடங்களாக நீட்டிப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். மேலும், இதுகுறித்து துறை சார்ந்த அமைச்சர் மற்றும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்தனர்.