கோவையில் நடைபெற்ற 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்றார். வனத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள், யானைகள் பாதுகாப்பு குறித்து அவர் பேசினார்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டுத் திடலில் இன்று (செப்.19) 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளுக்கான துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன், முதன்மை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுதான்சு குப்தா, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் மதிவேந்தன், பல்வேறு வன மண்டலங்களைச் சேர்ந்த படை அணியினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, ஒலிம்பிக் ஜோதியை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
விழாவிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மதிவேந்தன், "27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகும் வீரர்கள், அகில இந்திய வனத்துறை விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவார்கள். வனத்துறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை TNPSC மூலம் நிரப்ப உள்ளோம்," என்றார்.
மேலும் அவர், "யானை வழித்தடங்களை கண்டறிந்து ஆராய்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வனத்துறையின் சிறப்பான செயல்பாட்டிற்கான அறிகுறி. யானை-மனித மோதலைத் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.
வனவிலங்கு பிரச்சனைகள் குறித்து பேசிய அமைச்சர், "எல்லா இடங்களிலும் வனவிலங்கு பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகள் அதிகமாக உள்ள இடங்களில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மருதமலை அருகே உள்ள குப்பை கிடங்கை அகற்றும் நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசுவோம்," என்றார்.
இறுதியாக, "வேட்டை தடுப்பு காவலர்களின் ஊதிய உயர்வு குறித்து பரிசீலித்து வருகிறோம். நன்னீர் நாய்கள் அழிவு குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம். வரையாடு பாதுகாப்பில் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது," என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.