மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கை கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் விதத்திலும், தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதியை நசுக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. மருத்துவப் படிப்புகளிலும், முதுநிலை மருத்துவ கல்வியிலும் சேருவதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த நீட் நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் விதமாகவும் உள்ளது என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், மருத்துவ மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் பலதரப்பட்ட பாடத்திட்டம் உள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் நீட் தேர்வு என்பது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் அமையும். நுழைவுத்தேர்வுகளை எழுதுவதற்கு நகர்புறத்தில் உள்ள பயிற்சி வசதிகள், சிறப்பு வகுப்பு மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை என குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனவே, நகர்புற மாணவர்களுடன் கிராமப்புற மாணவர்கள் இணையாக போட்டியிட்டு மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வை எழுத முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த நீட் தேர்வினை ரத்துசெய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இன்று நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைந்துள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.