திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையத்தில் சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட காளிமுத்து என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் சிறுமிகளை ஜிப் ஓட்ட வைத்து வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னிடம் உள்ள ஜீப் குறித்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து, அபாயகரமான முறையில் வாகனத்தை இயக்க வைத்து அதனை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிறுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதற்கு காளிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறார்களை ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கியதோடு, அவர்களின் பாதுகாப்பை புறக்கணித்து செயல்பட்டதற்காக காளிமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது போன்ற ஆபத்தான செயல்களை தடுக்க வேண்டும் என்றும், சமூக ஊடகங்களில் லைக்குகள் மற்றும் பார்வையாளர்களை பெறுவதற்காக சிறார்களை பயன்படுத்தும் போக்கை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.