திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் பழங்கரை பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க வளாக கட்டிடமான ஐகேஎஃப் (IKF) இல் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆடை கண்காட்சியில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தங்களுக்கான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.
திருப்பூரில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களது ஆடைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். பின்னலாடையில் என்றும் சிறப்பம்சங்களுடன் திகழும் திருப்பூரில் ஒரே இடத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடைகளை இந்த கண்காட்சியில் வாங்க முடிகிறது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆடைகள் இந்த கண்காட்சியில் கிடைப்பதும், அதுவும் குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். அனைத்து வகையான ஆடைகளும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் முறையாக திருப்பூரில் நடைபெறும் இந்த நேரடி விற்பனை எக்ஸ்போவில் 50,000 பேருக்கு மேல் வருகை தரவும், சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என்றும் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அனைத்து விதமான ஆடைகளும் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.