கோவை கொடிசியாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சி தொடங்கியது. 120 ஸ்டால்களுடன் கூடிய இந்த கண்காட்சியில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
Coimbatore: கோவை கொடிசியாவில் இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச கட்டுமான கண்காட்சி இன்று தொடங்கியது. கோவை மண்டலம் கட்டிட பொறியாளர் சங்கமும் மற்றும் கட்டுமானம் மனை தொழில் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் இந்த கண்காட்சியை காவேரி குரூப் ஆப் கம்பெனி நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர், லட்சுமி செராமிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் முத்துராமன், ராமு இண்டஸ்ட்ரீஸ் ராமு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் கட்டுமான பணிக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டிட உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இலவச பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகளும் வழங்கப்படுகின்றன.
அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா ஏ ஹாலில் நடைபெறும் இந்த கண்காட்சி இன்று (28ம் தேதி) மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் 120 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இலவசமாக வந்து பங்கு பெறலாம்.
இந்த நிகழ்வில் கோசீனா கான் பெஸ்ட் தலைவர் வி பி பழனிச்சாமி, க்ரிக் கான் பெஸ்ட் தலைவர் ராஜதுரை, செயலாளர் செந்தில்நாதன், எஸ் கே இளங்கோவன், பொருளாளர் சுந்தர்ராஜன், எம் செந்தில் குமார் மற்றும் கோசீனா, க்ரிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.