கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களிடையே கோவை மாநகர காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவை பிரதான சாலையான லட்சுமி மில்ஸ் சிக்கனலில் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் எஸ்.என்.ஆர் கல்லூரி மாணவர்கள், சாலை நண்பர்கள், 'எஜூதர்மா' அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் 'ஷாப்த்ரூ' செயலியின் நிறுவனர்களும் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்தும், காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்தும் மற்றும் மது அருந்திவிட்டு பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சாலையில் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

