கோவையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய இப்பிரிவு மக்களுக்கு சிறந்த சேவை வழங்கும்.
கோவை: கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மேலும், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை துணைத்தலைவர் R.கோபிநாத், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி Dr.ரகுபதி வேலுசாமி, ஜி.கே.என்.எம் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், "தமிழகத்தின் மருத்துவத்துறை அடையாளங்களில் ஒன்றாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை பத்தாண்டுகளுக்கு முன்னரே புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய மருத்துவ மையமாகும்" என்றார்.
"முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு, ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் 18 வயது நிரம்பிய அனைத்து பொதுமக்களுக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் 110க்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் 38 வருவாய் மாவட்டங்களிலும் புற்றுநோய் கண்டறியும் பணியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், "மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, கலைஞரின் வருமுன் காப்போம், பாதம் பாதுகாப்போம் உள்ளிட்ட 36 திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான திட்டங்களாகும்" என்றார்.
"இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த 1 லட்சம் ரூபாய் தொகை விரைவில் 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்" என்றும் அவர் அறிவித்தார்.
இறுதியாக, புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகளுக்கான நடவடிக்கையில் ஜி.கே.என்.எம் மருத்துவமனை அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.