கோவை சிட்கோ பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. அடுத்தடுத்து மேலும் இரண்டு கம்பெனிகளுக்கு பரவிய தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை சுந்தராபுரம் அருகேயுள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நூர் அகமது என்பவருக்கு சொந்தமான வின் பிளாஸ்டிக் என்ற வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் முன்பாக இருந்த டிரான்ஸ்பார்மில் ஒரு காகம் அடிபட்டதால், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிற்சாலையில் பரவிய தீ மளமளவென பற்றி எரிந்தது.
இதில் பிளாஸ்டிக் பொருட்கள், உருக்கு இயந்திரம், அச்சு இயந்திரம் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாகின. இந்த பயங்கர தீ விபத்தில் 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் எரிந்து நசமாகின. மேலும் பிளாஸ்டிக் தொழிற்சாலை கட்டிடமும் சேதமடைந்தது. உரிமையாளர் நூர் அகமதின் பார்ட்னர் ஒருவரின் மகன் திருமணத்திற்காக தொழிலாளர்கள் சென்று விட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ அருகேயுள்ள டேப் கம்பெனி மற்றும் மெத்தை கம்பெனிகளுக்கும் பரவியது.
இந்த தீயை 3 தீயணைப்பு லாரிகளில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு லாரிகளில் போதியளவு தண்ணீர் கொண்டு வரவில்லை எனவும், இதன் காரணமாக தீயணைப்பு பணிகள் தாமதமாக நடந்ததாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த தீ விபத்து குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.