உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் 9 நாள் நவராத்திரி கொழு விழா துவங்கியது. அம்பாள் சைலபுத்திரி தேவி வடிவில் காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை நவராத்திரி கொழு விழா நடைபெற உள்ளது.
முதல் நாளான இன்று அம்பாள் சைலபுத்திரி தேவி வடிவத்தில் மஞ்சள் நிற பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்திருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் வெங்கடேச பெருமாள் சாமி புறப்பாடு மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவில் பகுதியில் கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சாமி சிலைகள், திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகள், பெண் தெய்வங்கள், கும்பகர்ணன் தூங்குவது போன்ற சாமி சிலைகள், கன்னிப்பெண்கள் சிலை உட்பட பல்வேறு வகையான சாமி சிலைகள் கொழு பொம்மை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. இவற்றை ஏராளமான பொதுமக்கள் தங்களது தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.
நவராத்திரி கொழு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தி பாடல்களுக்கு பரத நாட்டியம் மற்றும் புராணக் கதைகளை மாணவ மாணவிகள் நடனமாடி காட்டினர்.
உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று தொடங்கிய நவராத்திரி கொழு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகம் செய்திருந்தது.