அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை தற்போது நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து 18 நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
19-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இன்று நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சங்கங்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் போராட்டத்தை தொடர்வது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.