உடுமலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். வனப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆர் ஜி எம் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா IFS அவர்களின் உத்தரவின்படி இந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலைப்பேட்டை வனச்சரகம், திருப்பூர் வனக்கோட்டம், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை மற்றும் ஆரண்யா அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடத்தின.
இந்நிகழ்வில் உடுமலைப்பேட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்கள் வன உயிரினங்களும் வனப்பகுதியும் மனிதர்களின் சுயலாபத்திற்காக சிதைக்கப்படுவது குறித்து தத்ரூபமான ஓவியங்கள் வரைந்தும், கட்டுரைகள் எழுதியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வன உயிரினங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வனத்துறை சார்பாக மாணவ மாணவியர்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில், ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி வனப் பாதுகாவலர் கீதா IFS, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் மணிகண்டன், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன், ஆர் ஜி எம் கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு மூலம் மாணவர்களிடையே வனப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் கலை திறமையையும் வெளிக்கொணர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.