பொள்ளாச்சியில் கள்ளு இறக்கிய விவசாயிகளை போலீசார் கைது செய்ததை கண்டித்து, விவசாயிகள் டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கைதான விவசாயிகளை விடுவிக்க கோரி, சாலை மறியல் போராட்டம் நடத்த எச்சரிக்கை விடுத்தனர்.
கோவை: பொள்ளாச்சி உட்கோட்ட காவல்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏ.எஸ்.பி. கிருஸ்டி சிங், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் கள்ளு இறக்கப்படுகிறதா என ஆய்வு செய்து, கள்ளு இறக்கும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நாராயணசாமி விவசாய சங்கம் சார்பில் அதன் கொள்கை பரப்புச் செயலாளர் முருகானந்தம் தலைமையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த ஏ.எஸ்.பி., விவசாயிகளை சந்திக்க முயன்ற போது, சிறிது வேலை இருப்பதாக கூறி வாகனத்தில் ஏறி சென்று விட்டார்.
இந்த நிலையில், ஏ.எஸ்.பி. வரும் வரை டிஎஸ்பி அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருந்து வருகின்றனர். தமிழகத்தில் உடலை பாதிக்கக்கூடிய மது விற்பனை செய்யப்பட்டு வருவதால், முதலில் சம்பந்தப்பட்ட அமைச்சரையும், முதலமைச்சரையும் கைது செய்துவிட்டு பின்னர் கள்ளு இறக்கும் விவசாயிகளை கைது செய்யட்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், அண்டை மாநிலமான கேரளாவில் கள்ளு இறக்க அரசு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழக முதலமைச்சர் கேரள முதலமைச்சரிடம் கேட்டு அறிந்து தமிழகத்திலும் கள்ளு இறக்க அனுமதி தர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.