மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி புறக்கணிப்பு, தர்ணா, சாலை மறியல், மனித சங்கிளி உள்ளிட்டு மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இப்போராட்டம் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவ மாணவர்கள், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.