கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் இதுகுறித்து தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டு பகுதிகளில் மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி நகரப்பகுதிகளில் வசிக்கும் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை உடைய நலிவடைந்த மக்களுக்கு 323 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்ட ரூ.3 லட்சம் வரையும், ஆண்டு வருமானம் 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை உள்ள குறைந்த வருவாய் கொண்ட பிரிவினருக்கு 646 சதுர அடி உட்பரப்பு கொண்ட வீடுகட்டுவதற்கு ரூ.6 லட்சம் 20 ஆண்டு வரை 4 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும், ஆண்டு வருமானம் 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருவாய் கொண்ட பிரிவினருக்கு வீடுகட்டுவதற்கு ரூ.12 லட்சம் வரை 20 ஆண்டு வரை 3 சதவிகித வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியும் அளிக்கப்படும்.
மேலும், ஏற்கெனவே உள்ள வீட்டின் விரிவாக்கத்திற்கும், கட்டிமுடிக்கப்பட்ட வீட்டினை வாங்குவதற்கும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படும்.
மேலும், கணக்கெடுப்பில் விடுபட்ட பயனாளிகள் உடனடியாக மாநகராட்சி மைய அலுவல தகவல் மையத்தை அனுகி, கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், பயனாளிகள் விபரங்களுக்கு 94437 04002 என்ற எண்ணை அழைக்கவும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றம் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.