கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதிகளில் வாழும் மலைகிராம பழங்குடி மக்களை ஒருமையில் பேசிய வட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
நீதிமன்ற உத்தரவு படி பழங்குடி சட்டமான வன உரிமை சட்டத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொள்ளாச்சி ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் அலுவலகத்தில் சர் ஆட்சியர் தலைமையில் கடந்த 8 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.
ஆனைமலை வனப்பகுதிகளில் 17 மலைகிராமங்கள் உள்ள நிலையில், இந்த கூட்டம் தொடர்பான தகவலை மலை கிராம மக்களுக்கு தெரிவிக்காமல் அரசு அதிகாரிகள் ஒரு சில மலை கிராம மக்களை கொண்டு நடத்தி உள்ளனர். ஆனால், 17 கிராம மக்களையும் அழைத்தது போல் போலியாக பதிவிட்டுள்ளனர்.
மேலும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல் மலைகிராம மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பதிவும் நடைபெற்றுள்ளது. இது தெரிந்த பிறகு விண்ணப்பங்களை பெற மலை கிராம மக்கள் சென்று கேட்ட போது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் "நீங்கள் மலைகிராமத்தில் இருப்பதால் எந்த பயனும் இல்லை. உங்களுக்கு படிக்க தெரியுமா" என பல்வேறு விதமாக ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மற்றும் பழங்குடியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.