தொழில்நுட்பப் படிப்புகளின் மீது இருந்த மோகம் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர்களின் பார்வை கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கியே உள்ளது. இதனால், தொழில்நுட்பத் துறையில் ஆண்டுக்கு பல ஆயிரம் இடங்கள் காலியாக கிடக்கின்றன.

கடந்த கல்வி ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவையில் உள்ள பல கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். அதுவும் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவிவருகிறது.
கோவை போன்ற கல்வி மாவட்டங்களில் உள்ள கலைக் கல்லூரிகளில் பி.காம், பி.எஸ்சி, பிஏ, விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் கிடைப்பது அரிதாக உள்ளது. அதுவும் 12ம் வகுப்பில் உயிரியல், பையோ டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் படித்து பொதுத் தேர்வில் 1200-க்கு 1100 மதிப்பெண்ணுக்கும் மேல் எடுத்த மாணவ, மாணவிகள் கூட கலைக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டி வருவது வியப்படைய செய்கிறது.

குறிப்பாக கோவையில் பிரசிதிபெற்ற பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, இராமகிருஷ்ணா, சிஎம்எஸ், ஜிஆர்டி கலைக் கல்லூரி உள்ளிட்ட பல கலைக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களும் அலைமோதி வருகின்றனர். இதில், நிரம்பி வழியும் கலைக் கல்லூரியின் கூட்டத்தால் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்படுவது தனி.
இதனால், கோவையில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.காம், பி.ஏ, பி.எஸ்சி போன்ற பாடப் பிரிவுகள் ஒரு சில நிமிடங்களிலேயே நிரம்பி விட்டன.
கலை அறிவியல் கல்லூரி மீதான மாணவர்களின் மோகத்தைத் தொடர்ந்து, தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் பல பாடத்துறைகளுக்கு கட்டணங்களை உயர்த்தியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், பி.ஏ உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தற்போது, ஆரம்ப விலையே 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் துவங்குகிறது.
இதனிடயே, கூட்டத்தில் அலைமோதும் மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் வகையில் இடைத்தரகர்கள் உலா வருவது கொடுமை. குறிப்பிட்ட சில முக்கிய "அதிகாரிகள், ஆசிரியர்கள் மூலம் விரும்பிய பாடத்திட்டத்தை போட்டியின்றி பெற்றுக்கொள்ளலாம் வாங்க... வாங்க..." என்பதே அவர்களின் வாசகம். கூடுதலாக தொகை செலுத்தி வேண்டிய பாடத்திட்டத்தினை பெறும் வசதிபடைத்தோர்களால், விரும்பிய பாடத்திட்டத்தினை படிக்க முடியாமல் அல்லாடி வருகின்றனர் அடித்தட்டு மாணவ, மாணவியர்கள்.
இதில் மதிப்பெண், தகுதி அடிப்படையில் ஒருசில கல்லூரிகள் மாணவர்களுக்கு இடம் அளித்துள்ளன. அதிக மதிப்பெண் எடுத்தும் இடம் கிடைக்காதவர்கள் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளை நாடிவருகின்றனர்.