கோவை மாநகராட்சி விரைவில் சென்சார் அடிப்படையிலான நான்கு கழிப்பறைகளை ரேஸ் கோர்ஸ் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் 24 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தது. தற்போது இந்த கழிப்பறையின் இறுதிப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.
கோவை நகரின் முக்கிய பகுதியான காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலும் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியிலும் இந்த சென்சார் அடிப்படையிலான கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது.

இந்த கழிப்பறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக மொத்தம் நான்கு கழிப்பறைகளாக நிறுவப்பட்டுள்ளது. ஒரு கழிப்பறைகள் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூபாய் 24 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது.
கழிப்பறைகள் துருப்பிடிக்காதவாறு எஃகு உள்கட்டுமானிகள் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தொட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 35 சதுரஅடி அளவில் ஒவ்வொரு கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த சென்சார் முறை கழிப்பறைகள் உபயோகிக்க நாணயம் பயன்படுத்த வேண்டும். நாணையங்கள் கொண்டு பயன்படுத்தினால் மட்டுமே கழிவறைகளின் கதவுகள் திறக்கப்படும். பின்னர் பயனர்கள் அனுமதிக்கப்படுவார்கள், தற்போது இதற்கு 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயங்களில் எதை பயன்படுத்துவது என மாநகராட்சி ஆணையர் முடிவு செய்வார் என தெரிகிறது.
இதற்கு மின்வசதிக்காக 600 வாட் தேவைப்படுகிறது. தற்போது இதற்கான மின் இணைப்புக்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மின் இணைப்பு இல்லாததால் தற்போது பயன்பாட்டிற்கு வராத நிலையில் சென்சார் கழிவறைகள் உள்ளது. விரைவில் இந்த சென்சார் கழிவறைகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.