கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த வெரைட்டிஹால் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை தெலுங்கு வீதியில் காவல்துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.
சோதனையில்தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவரின் பெயர்பிரகாஷ் என்பதும் அவர் அங்கு கடை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, கடையில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு சுமார் 700 கிலோ அளவிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வெரைட்டிஹால் போலீசார் 700 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததுடன், பிரகாஷை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கோவைக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.