போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி தனியார் டுரீஸ்ட் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத் குன்னூர், உதகை, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். தற்போது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலணி பேருந்து நிலையத்தில் இருந்து, நீலகிரிக்கு செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்காததால், தனியார் டூரிஸ்ட் பஸ்கள் நீலகிரி மாவட்டத்திற்கு கோவையில் இருந்து இயக்கப்படுகின்றன. உதகை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், தனியார் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவசர தேவைகளுக்காக உதகை செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக கோவையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டிகளைக் கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், போதிய அளவு பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான கோவை நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.