கோவை மாவட்டத்தில் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு உத்தரவுக்கிணங்க கோவை மாவட்டம் முழுவதும் வழக்கம் போல் மே 15 (இன்று) முதல் அரசுப் பேருந்துகள் இயங்கும். பொதுமக்கள் யாரும் போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து அச்சப்பட தேவையில்லை.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலிருந்தும் அனைத்து அரசுப்பேருந்துகளையும் இயக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி காவல்துறையின் மூலம் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்பவர்கள் கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு போக்குவரத்துறையின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்வதுடன் தொடர்ந்து தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி கனரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ள நபர்கள் அரசு பேருந்துகளை இயக்க வரவேற்கப்படுகின்றனர், விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் (அசல்) உக்கடம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் மற்றும் பயணிகள் பொதுமக்கள் புகார் தெரிவிக்க காவல்துறை தொலைபேசி எண்கள். 0422-2301737 மற்றும் 0422-2220077 தொடர்பு கொள்ளலாம்.
பயணிகள் பயணம் தொடர்பாக எவ்வித அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம். இதுமட்டுமின்றி பொதுமக்களின் நலன் கருதி கோவை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.