கோவை சிவானந்தா காலனி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை (எண்: 1531) அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அன்னை கஸ்தூரிபா மகளிர் நுகர்வோர் அமைப்பு அளித்துள்ள மனுவில், குடியிருப்புகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் நிறைந்த பகுதி கோவை சிவானந்தா காலனி. இப்பகுதியில் பல வருடங்களாக டாஸ்மாக் கடை (எண்: 1531) செயல்பட்டு வருகிறது. இக்கடைக்கு வரும் மது பிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் செல்லும் பெண்களை இழிவாக பேசி வருகின்றனர். மேலும், இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள சாலையைக் கடந்தே பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் செல்ல வேண்டியுள்ளதால் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
மேலும், சாலையோரம் நிற்கும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அமர்ந்தும் மது அருந்தி வருகின்றனர். இதனால், பெண்கள் வெளியில் செல்வே முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் இருந்தபோது மனு அளித்தோம். மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அப்போதைய ஆட்சியர் உறுதியளித்தார். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட அட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மேற்குறிப்பிட்ட டாஸ்மாக் கடையினை அகற்ற வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.