தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் சார்பில் மேட்டுப்பாளையத்தை அடுத்த ஆலாங்கொம்பு பகுதியில் குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்பதை வலியுறுத்தி முழுநிலவு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆலாங்கொம்பு கிராம நிர்வாக அலுவலர் பி.சீலன் தலைமை வகித்தார். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் நிகழ்ச்சி மேலாளர் கே.நம்பிராஜன் வரவேற்றார். மேட்டுப்பாளையம் நகராட்சி இளநிலை உதவியாளர் ஆர்.ஜெயராமன், ஆலாங்கொம்பு ஆரம்ப சுகாதார நிலை ஆய்வாளர் எஸ்.அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் டி.வி.விஜயக்குமார் பேசும் போது, குடும்ப வறுமையின் காரணமாக சிறு வயது குழந்தைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி அவர்களுடைய குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். விளையாட்டு, படிப்பு என்ற பள்ளி வாழ்க்கையை மறந்து குழந்தைகள் வேலைக்கு செல்வதால் அவர்களது உடல், மனம் பாதிக்கப்படுவதோடு கல்வி முற்றிலும் மறுக்கப்படும் சூழல் உருவாகிறது.
இது போன்று பாதிக்கப்படும் குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் கல்வித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.
இது போன்ற திட்டங்களை பொது மக்கள் பயன்படுத்தி குழந்தைகள் பள்ளி செல்வதை உறுதி செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சிறுமுகை காவல் ஆய்வாளர் எம்.செல்வராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு காய்கறிகளின் எடை மற்றும் சத்துக்களை சொல்லும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு காய்கறிகள் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் (பயிற்சி) ரமேஷ் குமார், சிறப்பு பயிற்சி மைய ஆசிரியர்கள் கல்பனா, மும்தாஜ், ஜோதிமணி, களப்பணியாளர்கள் எழிலரசி, சரண்யா, ஊர்த்தலைவர் சந்திரன் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.