தேசிய மகளிர் ஆணையத்தின் 'மகிளா ஜென் சுன்வைவ்' அமைப்பு நாடு முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு நடத்தும் விசாரணை இரண்டு நாட்கள் கோவையில் நடைபெறுகிறது. இதற்காக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் ரேகா ஷர்மா கோவை வந்தார். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கடந்த 5 மாதங்களாக 'மகிளா ஜன் சுன்வைவ்' அமைப்பானது பெண்களுக்கான வழக்குகளை விசாரிக்க இந்தியா முழுவதும் மாவட்டம் வாரியாக சென்று விசாரணை நடத்துகிறது. போலீசாரால் தீா்க்க முடியாத வழக்குகளை மகிளா ஜன் சுன்வைவ் அமைப்பு ஏற்று நடத்தி வருகிறது.
மேலும், வடமாநிலங்கள் உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களின் குற்ற எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் குற்ற எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தமிழக போலீசார் எங்கள் அமைப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். சமீபத்தில் சென்னையில் விசாரணை மேற்கொண்டோம். அப்போது அங்கு 100 வழக்குகள் பதிவாகி இருந்தது. கோவையில் 40 வழக்குகள் மட்டுமே உள்ளது. 90 சதவிகித வழக்கு விசாரணை முடிவடைந்துவிட்டது.
இங்கு ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இதற்கு அண்டை மாவட்டத்தை சேர்ந்த 2 இடைநிலை காவலர்கள் உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து, எங்கள் அமைப்பின் சார்பில் அவர்கள் மீதும் விசாரணை எடுக்க கமிஷன் அமைத்துள்ளோம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்ள பெண்கள் புகார்களை அளிக்க முன்வர வேண்டும். திருப்பூரில் பெண்ணை தாக்கியதாக டி.எஸ்.பி. மீது எந்த புகாரும் எங்கள் அமைப்புக்கு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.