நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சையான் என்பவர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சயான் நேற்று இரவு 11.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் ரங்கநாதன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சயானுக்கு தேவையான மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலும்பு, குடல் மற்றும் உடல் நோய் தொடர்பான சிகிச்சைகள் சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்கள் சரியாகி வருகிறது. இங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சயானுக்கு தற்போது எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை. உரிய மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார். இவ்வாறு அவர் கூறினார்.