நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

முத்தலாக் விவகாரம் தொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பின் பெண்கள் அணி பொறுப்பாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தும் விதமாக மோடி தலைமையிலான பாஜக அரசு முத்தலாக் பிரச்சனையை அரசியலாக்குவதாக குற்றம்சாட்டினார்கள்.
மேலும், கற்பழிப்புகளுக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அவசர சட்டம் கொண்டு வராத பாஜக அரசு, முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதேன் என கேள்வி எழுப்பினர்.
சிலர் தவறாக தலாக் முறையினை பயன்படுத்துவதால் ஒட்டு மொத்த சட்டத்தையும் தவறாக பாஜக சித்தரித்து பிரச்சனையாக்குவதாகவும், இது முழுக்க அரசியல் சதித்திட்டம் எனவும் கூறிய அவர்கள், இஸ்லாமிய பெண்களை பாதுகாக்க வேண்டிய எண்ணம் பாஜக-விற்கு கிடையாது என தெரிவித்தனர். மேலும், பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பாதகமானது எனவும் அவர்கள் கூறினர்.
இஸ்லாமிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக வருகின்ற மே 20 ஆம் தேதி பெண்களுக்கான பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.