கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் பெங்களூர் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை வரும் மே 25ம் தேதியன்று காலை 10 மணியளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித் தகுதி உடையவர்களுக்கு மட்டும் என சிறப்பு நேர்வாக நடத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஸ்கைப்ரோ டெக்னாலஜிஸ் கலந்து கொண்டு தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும் மனுதாரர்கள் வேலையளிப்பவருக்கு எவ்வித கட்டணமும் அளிக்கத் தேவையில்லை. இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது.
மேலும், இந்நிகழ்ச்சியின் மூலம் வேலை பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்மனுதாரர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைதேடுவோர் பெருமளவில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.