கோவை மாநகராட்சியில், 100 வார்டுகள் உள்ளன. இதில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் மின் வரி என அனைத்து வரியையும் மக்கள் கட்டி வருகின்றனர். அவ்வாறு மாநகராட்சியின் வரிகட்டாதோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படுவதும் கோவையில் அரங்கேறி வருகிறது. ஆனால், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முழுமை பெற்றுள்ளனவா என்றால், அதற்கு இல்லை என்ற பதிலே வரும்.
இதில் குறிப்பாக, கோவை மாநகராட்சியில் பழுதடைந்துள்ள குப்பை தொட்டிகளால், சாலைகளில் குப்பை அதிக அளவில் சிதறி கிடைக்கின்றன. கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற 'ஸ்வச் சர்வேக்சன் 2017'-யினில் கோவை முதலிடம் பெறுவதற்கு கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டார். பின்னர், வழக்கம்போல் கோவை மாநகரத்தில் அதற்கான வேலைப் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதால், கோவையில் பல்வேறு பகுதிகளில் குப்பை, குளங்கள் என அனைத்திலும் சுகாதாரம் சீர்கெட்டு வருகிறது.
நகர் முழுவதும் குப்பை பரவிக்கிடக்கிறது. 'நாளொன்றுக்கு, 850 முதல், 1,000 டன் வரை குப்பை சேகரிக்கிறோம்' என, மாநகராட்சி கணக்கு தான் சொல்கிறது. எந்த வீதிக்குச் சென்றாலும் குப்பை தொட்டி நிரம்பி வழிவதை கண்கூடாக பார்க்கலாம். சில இடங்களில் குப்பைத்தொட்டியே இருப்பதில்லை.
குப்பை சேகரிக்க மாநகரில் வீதி வாரியாக 0.3 டன், 0.5 டன், ஒரு டன் என்ற அளவுகளில் 3,800-க்கும் மேற்பட்ட குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தவிர, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டிகளில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கின்றனர். சாலையோரங்களில், முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள், பல இடங்களில் துருப்பிடித்து, உடைந்து எலும்புக்கூடுபோல் பழுதடைந்து காணப்படுகிறது.
ஒரு சில இடங்களில் குப்பை தொட்டிகளும் இல்லாமல் குப்பை சாலைகளில் வழிகிறது. மீதமிருக்கும் குப்பை தொட்டிகளில் உணவு தேடி அலையும் தெருநாய்களும் உள்ளே நுழைந்து, குப்பைகளை வெளியே இழுத்து வருகிறது. காற்றின் வேகத்திற்கு ஏற்ப குப்பைகள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது.
அவ்வாறாக காட்சியளிப்பதே கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட உக்கடம் 82 மற்றும் 86-வது வார்டு ஆகும். 86-வது வார்டுக்குட்பட்ட ஹவுசிங் யூனிட், வின்சென்ட் ரோடு பகுதியிலும், 82-வது வார்டுக்குட்பட்ட பொன்விழா நகர் பகுதியிலும் குப்பைத் தொட்டி இருக்கிறதா என்றால் ஆச்சரியமே வேண்டாம், வீதியே குப்பைத் தொட்டிதான் என்கின்றனர் அப்பகுதி மக்கள். இதற்குக் காரணம் அப்பகுதியில் போதிய குப்பைத் தொட்டிகளை வைக்கத் தவறியதும், வைக்கப்பட்டுள்ள ஒரு சில குப்பைத் தொட்டிகளை பராமரிக்கத் தவறியதுமே ஆகும்.
இப்பகுதியில் சேதமடைந்த குப்பைத்தொட்டிகளை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.