நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமாதகாலமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் பெய்த பலத்த மழையில் குன்னூர் பி.டபில்யூ. வளாகத்தில் இருந்த 125 வருட பழமையான மரம் முறிந்து டிடிகே சாலையில் இருந்த டிரண்ஸ் பார்மர் மீது விழுந்தது. மேலும், அவை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன.

இதனிடையே, இன்று அதிகாலை குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காந்திபுரம் அருகே கேரளாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் கார் மீது பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்ததால் பெண் உட்பட இருவர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தோர் காயமடைந்தோரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

