தமிழகத்தில் மத்திய அமைச்சர் நேரடியாக ஆய்வு செய்வது, பலவீனமாக உள்ள தமிழக அரசை மிரட்டிப்பார்க்கும் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் புணரமைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமையகமான ஜீவா இல்லத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்தில் வறட்சி, மதுவிலக்கு, மருத்துவ மேல்படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து, காவிரி நதிநீர் மேல்வாரியம் என பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் உரிமைகளுக்காக போராடும் மக்கள் மீது அரசும், காவல்துறையும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. மக்களின் நலன்கள் மீது அக்கறையின்றி செயல்படும் மாநில அரசு தங்களின் பதவியை காத்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் 9-வது முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வரையிலும் இதுவரை தமிழகத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் ஆய்வு நடத்தியது இல்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சரையே நேரடியாக மத்திய அமைச்சர் மிரட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒன்று.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் எந்த விதமான பாரபட்சமுமின்றி ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்றத்தை உடனடியாகக்கூட்டி மானியக்கோரிக்கையை நடத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதிமுக-வின் இரு அணிகளும் இணைவது எடப்பாடி கையிலோ, ஓ.பன்னீர் செல்வம் கையிலோ இல்லை. இவ்விவகாரம் பிரதமர் மோடியின் கையில் இருக்கிறது" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

முன்னதாக புதுப்பிக்கப்பட்ட ஜீவா இல்லத்தை இரா.முத்தரசன் மற்றும் பொதுவுடமை தலைவர் ஜீவா அவர்களின் உருவச்சிலையை மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் ஆகியோர் திறந்துவைத்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் தலைமை தாங்கினார். நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.சண்முகம் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம் மற்றும் தங்கவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்