24 வயதுடைய 'ஜக்கு' என்று செல்லமாய் அழைக்கப்படும் மாற்றுத்திறனாளி, வெ.கி.ஜெகதீஷ். இவர் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிகையில் இணைய உலகில் உலாவர ஆரம்பித்து, 'வெப் பேஜ் டெவலப்மென்ட், கோரல் டிரா, போட்டோ ஷாப்' நுட்பங்களைக் கற்றுத்தேர்ந்தார். இன்று, தொழில்நுட்ப நேர்த்தியால் வலைத்தளம், சமூக வலைத்தளங்களில் சிறகடித்துப் பறக்கிறார். இணையம் மூலம் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபடத் துவங்கினார். இதன் மூலம் ஏராளமான நண்பர்கள் இவருக்கு அறிமுகமாயினர். இணையத்தின் மூலமே, வேலைவாய்ப்பும் பெற்றார். சென்னை நகரம் வெள்ளத்தால் தத்தளித்தபோது, 'சி பார் தமிழ்நாடு' என்ற 'ஹேஷ்டேக்' உருவாக்கி லாரிகளில், இங்கிருந்து உணவும் மருந்தும் சென்னை செல்ல உதவினார். மாற்றுத்திறனாளிகள் மனம் தளரக்கூடாதென, உளவியல் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தனது சொந்த முயற்சியில் ஜெகதீசன் எழுதிய 'இணையமும் இவனும்' என்னும் புத்தகம் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள விஜய் பார்க்கினில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. காகிதம் பதிப்பகம் சார்பில் இப்புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இவ்விழாவில், ஜெகதீசனின் அழைப்பு பத்திரிக்கை இல்லாமல் குறுஞ்செய்தி, தொலைபேசி, புலனம் மற்றும் முகநூல் போன்ற தகவல் தொழில்நுட்பம் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், சிறப்பு விருந்தினராக முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு புத்தகத்தினை வெளியிட்டனர்.

பின்னர், விழாவில் தினமலர் மூத்த ஆசிரியர் செல்வகுமார் பேசுகையில்; அன்பின் கூட்டம் இது. ஐக்குவின் அன்பால் சேர்ந்த இந்த கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு பெருகிகொண்டே போகிறது. என்னுடைய எழுத்திற்கு ஒவ்வொரு முறையும் அலைபேசி மூலமாக என்னை வாழ்த்துவது ஜக்கு. ஆனால் இன்று 'இணையமும் இவனும்' என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார். நானும் ஒரு புத்தகத்தை ஜாக்குவிற்காக எழுத வேண்டும் என்று நினைக்கிறன். அவ்வாறு எழுதும் போது அந்த புத்தகத்திற்கு 'இணையில்லா இவன்' என்று தான் எழுதுவேன். ஏன்னெற்றால், தன்னம்பிக்கையின் உச்சம் ஜக்கு. இவருக்கு யாரும் இணையில்லை. ஜக்கு எழுதிய புத்தகம் 45 நிமிடங்களில் நான் படித்து விட்டேன். ஒரு சில புத்தகங்கள் தன்னை கதைக்குள் எடுத்து செல்லும். ஆனால் இந்த புத்தகம் என்னை ஜக்குவிடம் பேசுவதுபோல் இருந்தது. வாரமலர் ஒன்றில் ஜக்குவை பற்றிய செய்தி எனது சென்னை நண்பர் வெளியிட்டார்.

ஆனால் எனக்கு ஒரு வருத்தம் இருந்தது ஏன் நான் முதலில் ஜக்குவை பற்றிய செய்தியை முதலில் கொண்டு செல்லவில்லை என்று. இந்த புத்தகமட்டுமல்ல உன்னை பற்றி எழுதும் புத்தகம் எங்கெங்கோ வெளியிடப்படும். இந்த புத்தகத்தில் அன்பு, பாசம், கிண்டல், கேலி, கவிதை அனைத்தும் உள்ளது. இந்த புத்தகத்தில் இயலாமை என்ற ஒரு வார்த்தை என்னை கலங்க வைத்தது. ஆனால், இவரால் பல்வேறு இயக்கங்கள் இயங்கி வருகிறது. இவருடைய இயக்கங்களால் இளைஞர்கள் பலர் எழுச்சி காண்பார்கள் என்றார்.

