வீடு கட்டித்தரவும், அரசுக்குடியிருப்பில் வசித்து வரும் பணியாளர்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டியும் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணி செய்யும் ஊழியர்களுக்கு வெறைட்டி ஹால் பகுதியிலுள்ள சிஎம்சி காலனியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு நானூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வசதியின்றி வசித்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் சாலை ஓரங்களிலும் வசித்து வருகின்றனர்.
சிஎம்சி காலனியில் வசிக்கும் தூய்மைப்பணி ஆய்வாளருக்கு மட்டும் மின்சார வசதி, குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தூய்மை பணியாளர்கள் பல முறை இதுகுறித்து மனுக்கள் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேலும் சிஎம்சி காலனியில் வசிக்கும் தூய்மை பணியாளர்களை மாநகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளலூரில் புதிதாக அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம்பெயர மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடம் பெயர்ந்தால், தூய்மை பணியாளர்கள் காலை 5.30 மணிக்கு பணிக்கு வருவதற்கு பேருந்து வசதிகள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. மேலும், நீண்ட தொலைவில் இருந்து பேருந்தில் வருவதற்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை. இதனால் சம்பளத்தின் பெரும் பகுதியை பேருந்து கட்டணத்திற்கே செலவிட வேண்டியிருக்கும் என குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது சிஎம்சி காலனியில் புதிதாக வீடுகளை அமைத்து தர இடம் இருந்தும் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துத் தராததைக் கண்டித்து சமூக நீதிக்கட்சியுடன் இணைந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியை முற்றூகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளரிடமும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.