கோவை சவுரிபாளையம் பகுதியில் 2 கிமீ சுற்றளவுக்குள் நான்கு டாஸ்மாக் பார்கள் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என சவுரிபாளையம் பகுதி மக்கள் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், டாஸ்மாக் கடைகள் அகற்றப்படாததை தொடர்ந்து இன்று மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அறிவித்திருந்தனர். தொடர்ந்து, வரும் ஜுன் 4-ம் தேதி டாஸ்மாக் கதவடைப்பு போராட்டம் நடத்துவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி 500-க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் பார் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்ற மக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதை தொடர்ந்து, அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், போராட்டத்தை கைவிடுமாறு பொதுமக்களை வலியுறுத்தினர். ஆனால், கலைந்து செல்ல மறுத்த பொதுமக்கள் அதிகாரிகள் வந்து கடைகளை மூடுவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் உறுதி வழக்கப்படாவிட்டால் போராட்டம் கைவிடப்படமாட்டாது என்றும் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, அப்பகுதிக்கு வந்த டாஸ்மாக் அதிகாரி விஜயசண்முகம் மற்றும் கோவை தெற்குப்பகுதி தாசில்தார் பக்தவச்சலம் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வரும் 3-ம் தேதிக்குள் டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும் என்று உறுதியளித்தனர்.
இதை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.