விவசாயிகளை பாதிக்கும் வகையில் மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சிரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில் கூறியுள்ளதாவது:- விவசாயிகளின் வாழ்வாதாரம் உணவு உற்பத்தி மற்றும் பிரதான வளர்ச்சியின் உற்ற துணையாக கால்நடை வளர்ப்பு இன்றுவரை இருந்து வருகிறது. மத்திய அரசு 2017 கால்நடை சந்தை ஒழுங்குமுறை விதிகள் என்ற தடை மூலம் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. அனுமதி பெறாமல் விற்பனை செய்வது, கால்நடைகளின் கொம்புகளில் வர்ணம் பூசக்கூடாது மற்றும் தலை, கழுத்து ஆகியவற்றில் மூக்கணாங்கயிறு அணிவிக்கக் கூடாது போன்ற பல்வேறு தடைகளை மத்திய அரசு சட்டத்தின் மூலம் கொண்டுவந்துள்ளது.

சுதந்திரமாக கால்நடைகளை வளர்க்க வேண்டும் என்றும், கயிறு மூலம் கட்டக் கூடாது என்றும், வெறும் தரைகளில் கால்நடைகளை படுக்க வைக்கக் கூடாது என்றும் இத்தகைய நடைமுறை தொடர்ந்தால் மிருகவதை சட்டம் பாயும் என விவசாயிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை விவசாயிகள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
விவசாயிகளின் பாரம்பரியமான மாட்டுப் பொங்கள் மற்றும் திருவிழாக்களின் போதும், புதிய விடுகளின் கிரகபிரவேசத்தின் போதும் பசு மாடு மற்றும் கன்றுகள் பயன்படுத்தப்படுவதும், திருவிழாக்களின் போது மாடுகளை குளிப்பாட்டி வர்ணம் பூசுவது பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் ஆகும். இத்தகைய முறைகளை மாற்றக்கூடாது.
வறட்சியால் பாதித்துள்ள கால்நடைகளுக்கு உரிய தீவணங்கள், கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தவிடு புண்ணாக்கு போன்றவற்றில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் உப தொழில் வளர்ச்சிக்கு உந்து சக்தியான கால்நடைகளை பாதுகாக்க தனிச்சட்டம் உருவாக்க வேண்டும். இத்தகைய மேம்பாட்டை செய்யாமல் மத்திய அரசு தேவையற்ற விவசாயிகளின் எவ்வித கோரிக்கையும் இல்லாமல் விவசாயத்திற்கு எதிராக இத்தகைய சட்டத்தை ஏற்றியிருப்பது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
இத்தகைய சட்டம் என்பது விவசாயிகளுக்கு எதிரான சட்டம். இச்சட்டத்ததை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்" என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.