ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மக்கள் மத்தியில் துண்டுபிரசுரங்களை வழங்கிய சேலம் இதழியல் மாணவி மீது வழக்கு பதிந்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளின் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் மக்கள் விரோத திட்டத்திற்கு எதிராகவும் துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் மத்தியில் விநியோகித்த பொழுது, இதழியல் படித்து வரும் கல்லூரி மாணவி வளர்மதி மற்றும் ஜெயந்தி ஆகிய இருவரையும் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் போலீசார் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்களுக்கும், தேச நலன்களுக்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிராக மத்திய மாநில அரசுகள் செயல்படுகிறபோது அதை, வாக்களித்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிற உரிமை, ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. இது அரசியல் சாசன ரீதியிலான உரிமையாகும். இதற்கு எதிராக போலீசார் இரண்டு பெண்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்திருப்பது சட்டவிரோதமான அத்துமீறலாகும்.
அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.