கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி நேற்று ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியது அதிமுக ஆட்சியையும் பாதுகாக்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவினர் ஒன்றுசேர்வதை காட்டுவதாக அக்கட்சியின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியது தொடர்பான கேள்விக்கு, அதிமுக ஆட்சியையும் பாதுகாக்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்கவும் கருத்து வேறுபாடுகளை மறந்து அதிமுகவினர் ஒன்றுசேர்வதை காட்டுகிறது என பதிலளித்தார். மேலும் ஆறுக்குட்டி அந்த அணியில் விலகியதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை எனவும், அதிமுகவில் பிளவு என்பதே கிடையாது எனவும் கூறிய அவர், 124 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது தேவையற்றது எனவும், தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று வந்தாலும் சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார். நடிகர் கமல்ஹாசனின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, ஊழல் என்பதை நிருபிக்க வேண்டுமெனவும், ஆதாரம் இல்லாமல் சொல்லக்கூடாது எனவும் பதிலளித்தார். மேலும் நாடு முன்னேற பொது வாழ்க்கைக்கு நடிகர் கமலஹாசன் வருவதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு, கர்நாடக அரசு அமைத்துள்ள விசாரணைக்குழு விசாரணையில் உண்மை வெளிவரும் என பதிலளித்தார்.