பாரமுல்லா, ஜம்மு காஷ்மீர்: யூரி தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் உள்ள ராணுவ முகாமைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளது ராணுவத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
பாரமுல்லா நகரில் உள்ள ராணுவ முகாமைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த ராணுவ முகாம் உள்ளது. 46 ராஷ்டிரிய ரைபிள் படையின் முகாம் இது. இங்கு நேற்று இரவு 10.30 மணியளவில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்துப் பாதுகாப்புப் படையினர் அவர்களுடன் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். மேலும் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சண்டை தொடருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2 வாரங்களுக்கு முன்புதான் யூரியில் உள்ள ராணுவ முகாமை தீவிரவாதிகள் தாக்கினர். அதில் 19 ராணுவத்தினர் வீர மரணமடைந்தனர். யூரியும் பாரமுல்லா மாவட்டத்தில்தான் உள்ளது.
இந்த சம்பவத்தால் வெகுண்ட இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமையன்று நள்ளிரவு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகளின் முகாம்களை சரமாரியாக தாக்கி அழித்தது. இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகும் தீவிரவாதிகள் துணிச்சலாக ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு முனைத் தாக்குதல்
தீவிரவாதிகள் இரு முனைகளிலிருந்து ராணுவ முகாமைத் தாக்கியுள்ளனர். ஒரு பிரிவு, குல்னார் பூங்காவிலிருந்து ராணுவ முகாமைத் தாக்கியது. இன்னொரு பிரிவு ராணுவ முகாமின் முக்கிய நுழைவாயிலில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் கூறுகிறது.
பாதுகாப்புப் படையினர் சுதாரிப்பாக செயல்பட்டதால் ராணுவ முகாமுக்குள் தீவிரவாதிகளால் ஊடுறுவ முடியாமல் போய் விட்டது. அந்த வகையில் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளின் நோக்கத்தை தவிடு பொடியாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.