ஆமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதை அடுத்து, பாக்.,க்கு காய்கறி சப்ளை செய்வதை நிறுத்த குஜராத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் சப்ளையை நிறுத்தி உள்ளனர். இதனால் குஜராத் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு தினமும் சுமார் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டது உள்ளது குறித்து ஆமதாபாத் காய்கறி முகவர் சங்க பொதுச் செயலாளர் அகமது பட்டேல் கூறுகையில், குஜராத்தில் இருந்து தினமும் 50 டிரக்களில் 10 டன் காய்கறிகள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்கிறது. தற்போது இருநாட்டு பதற்றம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 1997க்கு பிறகு முதல் முறையாக தற்போது தான் பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு உறவுகளும், நிலைமையும் சரியாகும் வரை காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டு இருக்கும் என்றார். இதனால் வியாபாரிகளுக்கு தினமும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படும். ஆனால் நாட்டு நலனை விட தனிமனித நலன் பெரிதல்ல. வங்கதேசம், வளைகுடா நாடுகள், கனடா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு வழக்கம் போல் காய்கறிகள் அனுப்பப்படும்.