நாளை மறுநாள் ஆயுத பூஜையும் அதை தொடர்ந்து வரும் 12ம் தேதி சரஸ்வதி பூஜையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்களில் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் தாங்கள் உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் புத்தகங்களுக்கு பூக்கள், பழங்களால் அலங்காரம் செய்து பூஜித்து வழிபடுவர். விழாவுக்கு இன்னும் ஒரு தினமே உள்ள நிலையில் கோவையில் உள்ள மளிகை மற்றும் பூக்கள் சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பூமார்க்கெட் பகுதியில் அதிக அளவில் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விலைஉயர்வு
பொதுமக்கள் பலரும் பூக்களை வாங்க குவிவதால் அவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி வியாபாரிகள் பூக்களின் விலையை 2 மடங்காக உயர்த்தி விற்பனை செய்து வருகின்றனர். என்ன தான் விலை அதிகரித்தாலும், பூக்கள் வாங்கி பூஜை செய்தே ஆகவேண்டும் என்ற முனைப்பு பொதுமக்கள் ஆர்வத்துடன் அவற்றை வாங்கிச் செல்வதில் தெரிகிறது.

பூக்களின்விலைப்பட்டியல்பின்வருமாறு:-
செவ்வந்திப் பூ ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது
முல்லை பூ ஒரு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஜாதி பூ ஒரு கிலோ ரூ.270 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அரளி பூ ஒரு கிலோ ரூ.240 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தாமரை ஒன்று ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செண்பகம் நான்கு ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்களின் கடந்த வார விலைப்பட்டியலுடன் ஒப்பிடுகையில் தற்போது 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. இது குறித்து பூ வியாபாரி சையது கூறுகையில் , 'ஆண்டுதோறும் ஆயுத பூஜை, விநாயகர் சதூர்த்தி மற்றும் ஓணம் பண்டிகைகளின் போது பூமார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த ஆண்டை விட தற்போது வாடிக்கையாளார்கள் குறைவாகவே வருகின்றனர். இருந்த போதும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் விற்பனையாளர்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. பெங்களூரு, ஓசூர், ராயக்கோட்டை, சத்தியமங்கலம், ஆகிய பகுதிகளில் இருந்து எங்களுக்கு பூக்கள் கிடைக்கிறது. நாங்கள் மொத்த கொள்முதல் செய்யும் போதே அதிக விலை கொடுத்து பூக்கள் வாங்குவதால் தான் தற்போதைய இந்த விலை உயர்வுக்கு காரணம்' என்றார்.

பழங்களின் விலைப்பட்டியல்பின்வருமாறு :-
ஆப்பிள் - ரூ.150
ஆரஞ்சு - ரூ.80
மாதுளை - ரூ.160
பன்னீர் திராட்சை - ரூ.80
சப்போட்டா - ரூ.80
கொய்யா - ரூ.100
பூக்களின் விலை ஏற்றம் போல பழங்களின் விலைகளிலும் சிறிது விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.