ஆயுத பூஜை உள்ளிட்ட பல்வேறு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம் பண்டிகைகள் ஆக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்டணம் குறைவாக வசூலிக்கும் அரசுப் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் வேறு வழியின்றி பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முடிவு செய்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் ஆம்னி பேருந்துகள், தங்களின் பயணக் கட்டணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகளவில் கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. வேறு வழியின்றி பயணிகள் அதில் பயணம் செய்து வருகின்றனர். சாதாரண நாட்களில் 300 முதல் 400 வரை வசூலிக்கும் ஆம்னி பேருந்து தற்போது 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளது.
இதனிடையே ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை குறித்து தொடர்ந்து வந்த புகாரை அடுத்து வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் ஆம்னி பேருந்துகளில் தீவிர சோதனை நடத்த வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.