சென்னை: முதலமைச்சரின் இலாக்காக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை திமுக உட்பட பல்வேறு கட்சிகள் வரவேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் நலம்பெற்று திரும்பும்வரை தமிழகத்தின் நலன் கருதி மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளில் அமைச்சரவையைக் கூட்டி முக்கிய முடிவெடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
ஆளுநரின் நடவடிக்கைக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் வரவேற்றுள்ளார். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் ஆளுநரின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக நலனை கருத்தில் கொண்டு நிதி அமைச்சர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.