சென்னை: பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருடு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், அண்ணா சாலை போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு ஸ்பென்சர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு பைக்கில் வந்த 3 பேரை மடக்கி, பைக் ஆவணங்களை கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ராஜேஷ் (20), கவுதம் (19) மற்றும் குமார் (17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் எனவும் தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் பைக்குகளை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.