கோவை மாவட்டம், மாவூத்தம்பதியில் தனியார் மது ஆலை நிர்வாகம் ஆற்றில் இருந்து நீர் எடுபதை தடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மாவூத்தம்பதி கிராமம், அத்திகண்டிவயல் பகுதியில் சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் வாழை, மஞ்சள், வெண்டை போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதேபகுதியில் இம்பீரல் ஸ்பிரிட் அண்ட் வயின் என்ற தனியார் மது ஆலையும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அத்திகண்டிவயல் ஓரம் அமைந்துள்ள வாளையாறு ஆற்றையொட்டி உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து சுமார் 751 மீட்டர் தூரம் குழாய் பதித்து சுமார் 300 கியூபிக் மீட்டர் நீர் எடுக்க அந்த மது ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, குழாய் பதிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்திய விவசாயிகள் ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நிலத்தடி நீரின்றி கடுமையாக பாதிக்கப்படும் எனவும், இத்திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு, 2013 ஆம் ஆண்டு அந்த தனியார் மது ஆலைக்கு வாளையாற்றில் இருந்து நீர் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆற்றின் ஓரேத்தில் இருந்து சுமார் 3 லட்சம் லிட்டர் நீர் எடுக்கலாம் எனவும் அந்த ஆலை நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், 2.5 இஞ்சி பைப் மூலம் மட்டுமே நீர் எடுக்க அரசு அனுமதித்துள்ள நிலையில், மது ஆலை நிர்வாகம் 8 இஞ்சி பைப்பிணை பொறுத்தி அதிகப்படியான நீரை எடுத்து வருகிறது என விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மற்றும் வன விலங்குகள் பயண்படுத்தும் நீரை தனியார் மது ஆலை நிர்வாகம் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறுகட்டப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், விவசாயிகளின் நலன் கருதி தனியார் ஆலை நீரை எடுக்க வழங்கிய அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.