முதல்வர் குறித்து அவதூரான தகவல்களை பரப்பியதாக கோவையில் வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை, தொண்டாமுத்தூர் ஐயன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (49) மற்றும் சுரேஷ் (58). தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் கனரா வங்கியில் ரமேஷ் எழுத்தாளராகவும், சுரேஷ் தங்க நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதியன்று அதிமுக மகளிர் அணி உறுப்பினரும், உள்ளாட்சித் தேர்தலில் 9வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடும் புனிதா தேவி மேற்குறிப்பிட்ட வங்கியில் பணம் செலுத்த சென்றுள்ளார். அப்போது, ரமேஷ் மற்றும சுரேஷ் இருவரும் இணைந்து புனிதா தேவியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குறிய கருத்தினை தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, வியாழனன்று புனிதா தேவி சில அதிமுக உறுப்பினர்களுடன் சென்று ஏன் முதல்வர் குறித்து அவ்வாறு பேசுகிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். அப்போதும், இருவரும் முதல்வர் குறித்து அவதூரான கருத்தையே தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, புனிதா தேவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வங்கி ஊழியர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோரை வெள்ளியன்று (இன்று) கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின் இந்த வழக்கு குறித்து விசாரித்த 6வது நடுவர் நீதிபதி ராஜவேலு, இருவரையும் 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும், இந்த வழக்கு குறித்தான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
