கோவை என்றாலே பல்வேறு சிறப்புகள் பெற்ற ஊர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் தற்போது மேலும் நம் ஊருக்கு ஒரு பெருமையை பெற்றுத்தந்துள்ளார் பள்ளி மாணவர் ஒருவர்.
இந்திய அளவிளான துப்பாக்கி சுடும் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்று வந்துள்ளார் கோவையை சேர்ந்த ஆஷிக் என்ற 8ம் வகுப்பு மாணவர். சாதிக்பாட்சா, ஜபீன்சுல்தானா ஆகிய இருவரும் தான் இந்த தங்கமகனின் பெற்றோர்.

ஆஷிக் கோபால் நாயுடு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். 7ம் வகுப்பு படிக்கும்போது தேசிய மாணவர் படையில் இணைந்த இவரை, குமரன் என்ற ஆசிரியர் உற்சாகத்துடன் வரவேற்று அவருக்கு குறிதவராமல் துப்பாக்கிச் சுடும் நெரியை கற்றுத்தந்தார்.
இதுகுறித்து குமரன் கூறுகையில், 'எங்கள் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய மாணவர் படையில் இணைந்துள்ளனர். அதில், ஆஷிக் கடந்த ஒரு வருடமாக தேசிய மாணவர் படையில் இணைந்து துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகிறார். 14 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில் அவர் அசாதாரணமாக சுட்டு பல்வேறு வெற்றிகளை பெற்றார்.

துப்பாக்கிச் சுடும் போட்டியில் 0.22 மில்லி மீட்டர் துப்பாக்கி பிரிவில் இந்திய ராணுவம் நடத்திய பல முகாம்களில் கலந்துகொண்டு போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளினார். தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் தூக்கும் துப்பாக்கி சுமார் 10 கிலோ எடைகொண்டது. இந்த கனத்தை தூக்கிக் கொண்டு துள்ளியமாக இலக்கை குறிபார்த்து சுடுவது கடினமானது. கடந்த மாதம் 19ம் தேதி தேசிய அளவிலான போட்டி தில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் மூன்றாம் இடம் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
போட்டிகளில் மட்டுமல்ல படிப்பிலும் படுசுட்டியாக விளங்கும் ஆஷிக் என்றும் வகுப்பில் முதல் மாணவனாக வருவது எங்கள் அனைவருக்கும் பெருமை' என்றார்.
இதைத்தொடர்ந்து சாதனைமாணவர் ஆஷிக்கை சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கடந்த ஒரு வருடமாக துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெற்று வருகிறேன். எனது ஆசிரியர் குமரன் எனக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து ஊக்கப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு முகாமிலும் ராணுவ வீரர்கள் எங்களுக்கு கடுமையான பயிற்சி அளித்தனர். தினமும் காலை 4 மணிக்கு பயிற்சி தொடங்கிவிடும். ஒவ்வொரு போட்டிக்கு செல்லும்போதும் எனது தந்தை எனக்கு நல்ல ஊக்கமளித்து அனுப்பிவைப்பார். அதோடு போட்டியில் பங்கேற்றோம் என்றில்லாமல் ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என்று அவ்வப்போது எனக்கு அறிவுரை வழங்குவார். இது எனக்கு மேலும் உற்சாகத்தை வழங்கியது. 10 கிலோ எடையுள்ள துப்பாக்கியை முதலில் நான் தூக்கியபோது தில்லி வரை செல்வேன் என நினைக்கவில்லை. அங்கிருந்த தட்பவெப்ப சூழ்நிலைகள் எனது குறிவைக்கும் திறனை சோதிப்பதாக இருந்தது. தமிழகத்தில் நான் பயிற்சி பெரும்போது இருந்த சூழ்நிலைகள் அங்கு இல்லை. கடுமையான காற்றினால் நான் குறிவைக்கும் இழக்கில் மாற்றம் ஏற்பட்டது. இருந்தபோதும், முயற்சிசெய்து இலக்கை குறிபார்த்து தாக்கினேன். அதில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. தேசிய மாணவர் படையின் இயக்குநர் ஜெனரல் சக்ரவர்த்தி எனக்கு வெண்கலப் பதக்கம் மற்றும் காசோலையை வழங்கினார்.
இந்த சாதனை தொடர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெருவதில் எனது ஆர்வத்தை அதிகரித்துள்ளது. எனக்கு விமானவியல் துறையில் கல்விபயில ஆசை. மேலும், விமானப்படையில் சேர்ந்து பல சாதனைகளை செய்வேன்' என்றார்.
இவ்வாறான சாதனைகளைப் படைப்பவர்கள் புதிதாக உருவாக்கப்படுவதில்லை. சிறுவர்களின் திறனை கண்டறிந்து உரிய முறையில் பயிற்றுவிப்பதன் மூலம் அவர்கள் பல சாதனை படைத்து நம் தேசத்திற்கு பெருமை சேர்க்கின்றனர் என்பதற்கு ஆஷிக்கும் ஒரு உதாரணமே.