உலகில் ஏதாவது ஒரு இடத்தில் வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவரது போராட்டமும், முயற்சிகளின் விளைவுகளாலும் தான் 1987ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வருமை ஒழிப்பு தினம் உருவானது. பின் ஐநா சபையால் 1992ம் ஆண்டு இந்த தினம் அங்கீகரிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மனிதனிடம் வர்க்க பேதம் உருவானது முதலே வறுமையும் தொடங்கிவிட்டது. நேற்று (அக்- 16) உலக உணவு தினம் இன்று (அக்- 17) உலக வறுமை தினத்தை ஒன்றுபோல அமைத்திருக்கிறார்கள். உணவின் முக்கியத்துவம் அறிந்தாலே வறுமையின் பிடியில் இருந்து அனைவரையும் காப்பாற்றலாம். ஆனால், இங்கே நாட்டின் பொருளாதாரம் மக்களின் வறுமைக் கோட்டை தீர்மானிக்கிறது.
தன் நாட்டைப் பற்றி வெளிவுலகிற்கு பொய் தோற்றத்தைக் காட்டும் திறமையற்ற ஆட்சியாளர்கள். இந்தியாவின் மக்கள் தொகையில் 45 கோடியே 60 லட்சம் பேர் வறுமை கோட்டிற்குகீழ் வாழ்கின்றனர் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மாறுபட்ட சமூக அமைப்பு, பொருளாதார வளர்ச்சி, நில அமைப்பு, கிராமங்கள், நகரங்கள் என இருந்தபோதிலும், கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சற்று சிறிய வளர்ச்சியை அடைந்துள்ளது.
அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, சுகாதாரம், இருப்பிடம், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு என அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும். இவையாவும் இல்லாதவர்களே வறுமைநிலையில் இருப்பவர்கள்.
உழைக்க தயாராக ஒருவன் இருப்பதால் மட்டும் அவன் தன் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற நிலை நம் உலகில் உருவாகியுள்ளது. வறுமையில் சிக்கிய மக்கள் உழைக்க முயற்சித்தும் எப்படி, எங்கே என வழிதெரியாமல் உள்ளனர்.
முதலாளித்துவத்திலும், அரசியலிலும், தொழிற்சாலைகளிலும் ஒருவனின் உழைப்புக்கு பொருத்தமின்றி குவியும் கோடிக்கணக்கான பணத்தோடு, ஒரு கூலித் தொழிலாளியின் ஊதியம் எப்படி போட்டிபோட முடியும். அதேசமயம், கூலித்தொழிலாளி வேலைகளும் ஒழிக்கப்படக் கூடியது அல்ல. இந்த ஏற்றத்தாழ்வுகளை எப்படி சமப்படுத்துவது கடினமோ, அதே அளவிற்கு வறுமை ஒழிப்பிலும் கடினம் உள்ளது.
50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமலும் இருக்கும்போது, அந்த நாட்டில் மெட்ரோ ரயில், பல்லாயிரம் கோடிகளில் இலவசம், மாணியம், இணையதள சேவை, உலக அளவிலான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பணக்கார நாடு போல காட்டிக் கொண்டு தங்களது ஆதாயத்தை மட்டுமே தேடிக்கொள்கின்றனர். இது நோயால் பாதிக்கப்பட்ட உடலுக்கு, உயர் ரக ஆடையும், தலைப்பாகையும்
உடுத்திப்பார்க்கும் நிலையே. அதனால், ஆரோக்கியம் வந்துவிடாது. அவ்வாறே நம் நாடு உள்ளது.
மக்கள் ஏழ்மை நிலையில் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது என பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏழ்மை நிலையில் இருப்பவர்களை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்றிட முடியாது. ஆனால், இப்போதிருந்து பல தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் தலைமுறையினரும் தொடர்ந்து வறுமைக் கோட்டிலேயே வாழ்வதை தவிர்க்கலாம்.