சென்னை: சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 8.13 மணியளவில் மொபைல் நம்பர் ஒன்றில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் தகவல் கிடைத்தது. அதில், போலீஸ் பிடித்து வைத்திருக்கும் ஐஎஸ்எஸ்எஸ் சம்பந்தப்பட்ட நபர்களை அடுத்த 42 மணி நேரத்திற்குள் விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவுக்குள் குண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த எஸ்எம்எஸ் தமிழில் வந்துள்ளது. 2 முறை இந்த எஸ்எம்எஸ் வந்தது. சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன், கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ரயில்வே ஸ்டேசனின் அனைத்து நடைமேடை, சரக்கு பெட்டக அறை உட்பட எல்லா பகுதிகளும் துப்புரவாக ஆய்வு செய்யப்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடந்த சோதனையின் முடிவில், எஸ்எம்எஸ்ஸில் வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த மொபைல் எண் யாருடையது, எந்த முகவரியில் இருந்து அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்கின்றனர்.