கோவை மாவட்டம், தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் கோவை மாநகராட்சி மற்றும் இந்து நாளிதழ் இணைந்து செவ்வாயன்று டெங்கு விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. இதில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் மாணவர்களிடையே பேசியதாவது:-

“கோவை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் டெங்கு விழிப்புணர்வை எடுத்துரைக்க வேண்டும்.
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. வீட்டின் அருகே தொட்டியில் சேமித்து வைத்துள்ள நீர், பழைய டயர்கள், தேனீர் கோப்பைகள், தேங்காய் ஓடு, உடைந்த பானை முதலியவற்றில் தேங்கும் நீரில் கொசு அதிகளவில் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக உள்ளது. எனவே, நீர் தேங்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாநகராட்சி ஊழியர்கள் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் உருவாகும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்” என பள்ளி மாணவர்களிடம் விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் (மத்திய மண்டலம்) மோகனசுந்தரி, பள்ளி செயலாளர் சிவராமன், பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஆர்.கே எர்கான் மேலாண்மை இயக்குநர் சிவசங்கர், இந்து நாளிதழின் உறுப்பினர் அமர்நாத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.