கோவை மாவட்ட மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சாரிக்கை நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பேசுகையில், வடகிழக்கு பருவமழை வருவதை முன்னிட்டு மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக மழை காலங்களில் மாவட்ட நிர்வாகம் அமைத்த பேரிடர் குழுவுடன் இணைந்து மாநகராட்சி பணியாளர்களும் பணியாற்றுவார்கள். மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து நீரினை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு மாற்று ஏற்பாடாக வெள்ள நிவாரண தங்குமிடங்களான பள்ளிக்கூடம், சமுதாயக் கூடம், திருமண மண்டபம் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கவும் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மழைக்காலங்களில் வரும் புகார்களை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் வகையில் 8190000200 ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மழைக்காலங்களில் நாய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் கழிவுகளை அகற்றிடவும் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சுற்றுப்புறங்களை சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் நீர் தொட்டிகளை காலமுறையில் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், நகர்நல அலுவலர் மரு.சந்தோஷ்குமார் மற்றும் அனைத்து உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்துகொண்டனர்.