கோவையில் கடந்த 2014ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பணை செய்யப்பட்டதாக, தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மாநகர துணை காவல் ஆணையர் உட்பட, 5 காவல்துறையினர் கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
கடந்த 2014ம் ஆண்டு கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த மங்கள்ராஜ் என்ற வியாபாரி தனது குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மாயமானதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.
இதனிடையே இவ்வழக்கில் அப்போது கோவை மாநகர துணை ஆணையராக பணியாற்றிய சுகுமார், உதவி ஆய்வாளர் செல்வராஜ், காவலர்கள் செந்தில்குமார், ஜான், கதிரேசன் ஆகிய 5 காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறியதை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 17 பேர் மீதும் சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதன் பேரில் 17 பேரையும் ஆஜராகுமாறு கோவை குற்றவியல் முதன்மை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ள 5 காவல்துறையினர் உட்பட 17 பேர் இன்று நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் ஆஜராகினர்.
இதையடுத்து வழக்கை வருகிற நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த சுகுமார் தற்போது பழனி சிறப்பு காவல்படை பட்டாலியன் கமான்டண்ட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் 5 போலீசார் ஆஜரானதை அடுத்து நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.